Sunday, August 16, 2020

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 41

 * யார் காரணி* !!!

 ஒரு துறவி இருந்தார்,   அவர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை அவர் வைத்திருந்தார் .

 எங்கே சென்றாலும் அதை எடுத்து செல்ல மறக்க மாட்டார்.அவ்வப்போது அதை எடுத்து தன் முகத்தை பார்த்துக் கொள்வார்.

 அவருடைய சீடர்களுக்கு அது வேடிக்கையாக இருந்தது.

 இவர் எல்லா ஆசைகளும் துறந்தவர் ஆயிற்றே,  பிறகு எதற்காக இப்படி அடிக்கடி தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறார் என்று குழப்பம் எழுந்தது.

 துறவிக்கு தெரியாமல் தங்களுக்குள் அது பற்றி அடிக்கடி பேசிக் கொண்டார்கள்.

ஒரு கட்டத்தில் தங்கள் குருவான அவரை கிண்டல் செய்யவும் ஆரம்பித்தார்கள்.

 மேலும் நம் குருநாதருக்கு,  தான் ரொம்ப அழகு என்று நினைப்பு!  அதனால்தான் அடிக்கடி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து ரசித்துக்

கொண்டிருக்கிறார் என்று பேசிக் கொண்டனர்.

 சில நேரங்களில் அவர்கள் அப்படி பேசியது துறவியின் காதுகளில் விழுந்தது, ஆனாலும் அவர் தன் இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை .

 இவ்வாறு இருக்க,

 ஒருநாள் அந்நாட்டு மன்னன் அந்தத் துறவியைப் பார்க்க வந்திருந்தான்.

அவன் பணிவுடன் ஆசிரமத்திற்குள் நுழைந்து துறவியை வணங்கிய போது அவர் வழக்கம் போல கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 இப்பொழுது மன்னனுக்கு அதிர்ச்சி!

" சுவாமி நீங்கள் எல்லாவற்றையும் துறந்தவர் ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் துறக்க முடியவில்லையா என்ன?  என்று அவரிடம் கேட்டான் மன்னன் .

 துறவி சிரித்தார்.

" இதே சந்தேகம் என் சீடர்கள் பலருக்கு இருக்கிறது,  அவர்கள் கேட்கவில்லை நீங்கள் கேட்டுவிட்டீர்கள் என்றவர், தான் கண்ணாடியை பார்ப்பதற்கான  காரணத்தை மன்னனிடம் சொன்னார் .

 மேலும் எனக்கு ஏதாவது பெருமை கிடைத்தால் அதற்கு காரணம் யார் என்று தெரிந்து கொள்ள இந்த கண்ணாடியை பார்ப்பேன் .அதில் என் உருவம் தெரியும்.

எனக்கு பெருமை கிடைக்க நானே முதல் காரணம் என்பதை உணர்ந்து கொள்வேன்.

'இந்த பெருமையை மண்டைக்கு ஏற்றி தலைகனம் கொண்டால் வீழ்ச்சி அடைய போவது யார் என்று கேட்டுக் கொண்டு கண்ணாடியை பார்ப்பேன் .அதில்  நான் தெரிவேன் .இந்த உண்மையை புரிந்து கொண்டு என்னுடைய இயல்பு நிலையை பெறுவேன் .

 கூடவே எனக்கு ஏதாவது பிரச்சினை வந்தால்,  பிரச்சனைக்கு யார் காரணம் என்று தெரிந்து கொள்ள கண்ணாடியை பார்ப்பேன் .

 அங்கே அந்தக் கண்ணாடியில் என் உருவம் தோன்றும் எனவே  என் பிரச்சனைக்கு நானே முதல் காரணம் என்று புரிந்து கொள்வேன்.

 சரி,  பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டாமா அதற்கு பொருத்தமான நபர் யாரென்று தேடுவதற்காக மறுபடியும் கண்ணாடியை பார்ப்பேன், அங்கே நான் மீண்டும் தெரிவேன் .

 எனவே, என் பிரச்சினையை யாரோ   வந்து தீர்ப்பார்கள் என்று காத்திருக்காமல்,  நானே தான் என் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று புரிந்து கொள்வேன் .

 எப்போதும் இந்தக் கண்ணாடி என்னிடம் இருப்பதால் எனக்கு நேரும் நன்மைக்கும் தீமைக்கும் யார் காரணம் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது .

என் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் யார் காரணமாக இருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது என்றார் துறவி .

 அன்பிற்கினிய உறவுகளே நம் வளர்ச்சிக்கும் நம் வீழ்ச்சிக்கும் நாம்தான் முதல் காரணமாக இருக்க முடியும் .

 வாழ்க்கை நாம் நினைப்பது போல மிக கடினமானது அல்ல

 மிகவும் எளிமையானது.

 அதை கடினமாக்குவதும், அல்லது அதை எளிமையாக கையாளுவதும் நம் கையில் உள்ளது.*

No comments:

Post a Comment